ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு சதி; விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அவசர அவசரமாக கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டவும், தமிழ்நாட்டை பாழ்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு ஒத்து போவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திடடத்துக்காக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு சதி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.