அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு: பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன் தொண்டர்கள் குழப்பம்


அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு: பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன் தொண்டர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 13 May 2019 11:15 PM GMT (Updated: 13 May 2019 7:08 PM GMT)

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீரென பிரசாரத்தை ரத்து செய்தார். இது அவரது கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக மோகன்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலை சின்னதாராபுரம் பஸ் நிலையம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகில், ஈசநத்தம் கடைவீதி, ஆண்டிப்பட்டிக்கோட்டை மேம்பாலம், பள்ளப்பட்டி ஷாநகர், பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பு ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்தவேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்து கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன் என்று கூறினார்.

தீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச்சு இருந்ததாக கூறி கமல்ஹாசனுக்கு, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் 13-ந்தேதி (நேற்று) மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொள்ள வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தென்னிலை, பரமத்தி ஆகிய இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தேர்தல் பிரிவு அதிகாரிகள் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீஸ் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், கரூர் கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு திடீரென பிரசாரத்தை ரத்து செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காரில் அவர் மதுரைக்கு சென்று விட்டதாகவும், மீண்டும் வருகிற 16-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

பிரசாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த வேளையில் திடீரென கமல்ஹாசன் பிரசாரத்தை ரத்து செய்தது ஏன்? என நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.இது தொடர்பாக கட்சியின் மாவட்ட நிர்வாகி புகழ்முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அது தொடர்பாக உரிய அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் வைகோ இன்று (நேற்று) வேலாயுதம்பாளையத்தில் பேசுகிறார். இதன் காரணமாக தான் வருகிற 16-ந்தேதி அன்று வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் நீதிமய்யம் சார்பில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டு விட்டோம். இதனை ஏற்று கொண்டு தான் கட்சி தலைவர் கமல்ஹாசன் கரூரில் இருந்து புறப்பட்டு சென்றார் என்றார். ஆனால் தேர்தல் அதிகாரிகளிடம் விசாரித்த போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என கூறினர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story