கடலூர் முதுநகர் அருகே, கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை, சப்-கலெக்டர் விசாரணை


கடலூர் முதுநகர் அருகே, கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை, சப்-கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2019 10:30 PM GMT (Updated: 13 May 2019 7:41 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்,

சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை சின்னாண்டிக்குழியை சேர்ந்தவர் இளவரசன். வெல்டர். இவருக்கும், கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் எஸ்.புதூர் மேற்குதெருவை சேர்ந்த வைகுந்தன் மகள் விஜயலலிதா(வயது 26) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் செம்மங்குப்பம் சோனஞ்சாவடியில் தனியாக வசித்து வந்தனர். விஜயலலிதா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் இளவரசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, விஜயலலிதாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதுபோதையில் விஜயலலிதாவை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த விஜயலலிதா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, விஜயலலிதாவின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வைகுந்தன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் விஜயலலிதாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story