திண்டிவனம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்


திண்டிவனம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 7:41 PM GMT)

திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மான முறையில் இறந்தார். சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பிரம்மதேசம்,

திண்டிவனம் அருகே உள்ள ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை மகன் சுரேஷ்(வயது 30). இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் கடந்த 2015-ம் ஆண்டு மயிலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த ஜக்காம்பேட்டையை சேர்ந்த பவித்ரா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரித்திகா(3), லக்‌ஷிதா என்ற 5 மாத பெண் குழந்தைகள் உள்ளனர். பவித்ரா திருமணம் ஆனவுடன் தனது படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் சுரேஷ் தான் பணிபுரியும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பவித்ரா தனது கணவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவரை பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுரேஷ் சேர்த்தார். டாக்டர்கள் பவித்ராவை சோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ் தனது மாமனார் ரத்தினகுமாரிடம் பவித்ரா இறந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் அவரது உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து ரத்தினகுமார் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மருமகனுக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்த எனது மகளை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். எனவே எனது மகளின் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பவித்ரா குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பவித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story