வீடுகளில் தானாக பற்றி எரியும் தீ; பொதுமக்கள் தர்ணா போராட்டம்


வீடுகளில் தானாக பற்றி எரியும் தீ; பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2019 11:20 PM GMT (Updated: 13 May 2019 11:20 PM GMT)

மூலனூர் அருகே வீடுகளில் தானாக தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மூலனூர்,

மூலனூர் அருகே எம்.காளிப்பாளையத்தில் வீடுகளில் தானாக தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். கண்காணிப்பு கேமரா பொருத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உற்பட்ட எம்.காளிபாளையம் ஊராட்சி காளிபாளையம், வாளநாயக்கன்வலசு ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரவு மற்றும் பகல் நேரங்களில் வீடுகளின் மேல் கற்கள் விழுந்தது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கண்காணித்த போதிலும் வீடுகளின் மீது கற்கள் விழுவது தொடர்கதையானது.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் கடந்த சில நாட்களாக எம்.காளிபாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் ஆங்காங்கே திடீரென்று தீ பிடித்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

வளர்மதி என்பவரது வீட்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் இலவச கோழிகள் வளர்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட கோழிகள் அனைத்தும் எரிந்தன. அன்னபூரணி என்பவரது வீட்டில் பற்றி எரிந்த தீயில் மெத்தை மற்றும் துணிகள் எரிந்து நாசம் அடைந்தன. இது போன்று சுமார் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் அடிக்கடி தீப்பிடித்தது. இது குறித்து மூலனூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீடுகளில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்பகுதியில் உள்ள சாலையோரம் அடுப்பு வைத்து சமையல் செய்து சாப்பிட்டு நூதன போராட்டம் நடத்தினர். இருப்பினும் நேற்று அங்குள்ள ஒரு சில வீடுகளில் மீண்டும் தானாக தீ பற்றி எரிந்தது.

இதனால் தீயில் சேதம் அடைந்த பொருட்களை பொதுமக்கள் தங்களின் வீடுகளின் முன்பு போட்டு உள்ளனர்.

நேற்று அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒட்டன்சத்திரம்-மூலனூர் செல்லும் சாலையில் நின்று தர்ணா போராட்டம் நடத்தினர். சாலை மறியலுக்கும் முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, தாராபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறும் போது, வீடுகளின் மீது கற்கள் விழும் போது சிறுவர்கள், போதை ஆசாமிகள் எறிந்து இருக்கலாம் என கருதினோம். ஆனால் விடிய, விடிய விழித்திருந்ததில் அப்படி யாரும் எறிந்ததாக தெரியவில்லை.

தற்போது வீடுகளில் தானாக தீ பற்றி எரிவதால் பீதி அடைந்து மரத்தடியில் தஞ்சம் புகுந்து உள்ளோம். பில்லி, சூனியம் காரணமாக வீடுகளில் தீப்பிடித்து எரிகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. இதன் காரணமாக வீடுகளில் படுத்து தூங்குவதற்கே பயமாக இருக்கிறது. எனவே மூலனூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, தீ விபத்து குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story