வாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் கலெக்டர் சாந்தா தகவல்


வாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 7:56 PM GMT)

வாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டார்.

அப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், தமிழக சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவி யாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.

பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், முசிறி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், தனித்துணை கலெக்டர் மனோகரன், வட்டாட்சியர் சித்ரா, வேட்பாளர்களின் முகவர்கள் தேவராஜன், அன்புதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story