விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 9:21 PM GMT)

விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர்,

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கிற்கு குழாய்கள் வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இதற்காக துவாக்குடி அருகே உள்ள மேலமாங்காவனம், திருநெடுங்களம், வாழவந்தான் கோட்டை பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள்அமைக்க அந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்ப சென்று விட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், இதனை கைவிடக்கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் துவாக்குடி பஸ் நிலையத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இதில், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story