கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது


கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 9:41 PM GMT)

கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதான வளாகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை தொடங்கியது. அப்போது 17 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு சிறப்பு விதிகள் 2012-ன்படி தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 732 உள்ளது. இந்த வாகனங்களை தணிக்கை செய்யும் பணி 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதான வளாகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களின் தர நிலை குறித்து கண்டறியும் ஆய்வு நேற்று தொடங்கியது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் வாகன ஆய்வு குழுவினர் பள்ளி, கல்லூரி வாகனங்களை பார்வையிட்டு தணிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது:-

தகுதி சான்று ரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 732 உள்ளன. இம்மாதம் (மே மாதம்) இறுதி வரை 4 கட்டங்களாக வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது வாகனங்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களான முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, படிகட்டுகளின் அளவு, அவசர கால வழி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுனர் இருக்கை, மோட்டார் வாகன விதிகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி, தொலைபேசி எண்கள், பள்ளியின் பெயர், வாகனத்தை சுற்றி பாதுகாப்பு வளையம், மாணவ, மாணவிகள் இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று 238 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 17 பஸ்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் போது பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் தெரிவித்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தணிக்கையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கர்ராஜ், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story