தெருநாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளி மான் சாவு


தெருநாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளி மான் சாவு
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 10:00 PM GMT)

கல்லல் அருகே ஊருக்குள் புகுந்த புள்ளி மானை தெருநாய்கள் கடித்துக் குதறியதால், மான் இறந்தது.

கல்லல்,

கல்லல் மற்றும் மதகுபட்டி பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வசிக்கின்றன. கோடை காலமான தற்போது கடுமையான வெயில் வாட்டி வருவதால், காடுகளில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காடுகளில் வசிக்கும் மான்கள் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருகின்றன. அப்போது அந்த மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்களால் கடிபட்டும் உயிர் இழக்கின்றன.

கல்லலை அடுத்த நெற்புகாபட்டியில் ஒரு புள்ளிமான் ஊருக்குள் வந்தது. இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த நாய்கள் மானை துரத்தி கடித்து குதறின. அதில் பலத்த காயம் அடைந்த புள்ளி மான் பற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சிகிச்சை அளிப்பதற்குள் புள்ளிமான் இறந்தது.

இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறியதாவது:– கோடை காலத்தில் காடுகளில் ஏற்பட்ட வறட்சியால் மான் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. அந்த நேரத்தில் அவை பல்வேறு சம்பவங்களில் மான்கள் இறந்து போகின்றன. வனத்துறையினர் கோடைகாலத்தில் காட்டில் வாழும் விலங்குகள் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் அமைத்து வந்தனர். அதுபோல தற்போதும் தண்ணீர் தொட்டிகளை அமைத்தால் விலங்கினங்களை சாகாமல் பாதுகாக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story