மராட்டியத்தில் ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும் தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்


மராட்டியத்தில் ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும் தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 14 May 2019 10:36 PM GMT (Updated: 14 May 2019 10:36 PM GMT)

மராட்டியத்தில் இந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் பருவமழைக்காலம் ஆகும். குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பருவமழையையே நம்பியிருக்கின்றனர். மாநிலத்தில் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றன. மக்கள் குடிநீருக்கே பரிதவித்து வருகின்றனர்.

மாநில தலைநகர் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிநீர் தேவைக்காக மும்பைவாசிகள் பருவ மழையை தான் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு...

இந்த நிலையில், மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என்றும், வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்யும் என்றும் ஏற்கனவே ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மும்பையில் வழக்கமாக பருவமழை ஜூன் 8 அல்லது 10-ந் தேதியில் தொடங்கும்.

இந்தநிலையில், மராட்டியத்தில் இந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தான் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மும்பையில் பருவமழை தொடங்க ஜூன் 18 அல்லது 20-ந் தேதி கூட ஆகலாம் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Next Story