பாகூர் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து
பாகூர் அருகே மினிவேன் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்தனர்.
பாகூர்,
பாகூர் அருகே ஆராய்ச்சிக்குப்பம் பேட் பகுதியில் ஒருவர் இறந்துபோனார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பகுதியான தூக்கனாம்பாக்கம் அருகே உள்ள அழகியநத்தம் காலனியை சேர்ந்த 20 பேர் மினிவேனில் நேற்று காலை ஆராய்ச்சிக்குப்பத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
இரண்டாயிரம் விளாகம் – குருவிநத்தம் ஏரிக்கரை சாலையில் வந்தபோது, திடீரென்று மினிவேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட வேனில் சென்ற பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.