ஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை; மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன


ஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை; மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 15 May 2019 11:45 PM GMT (Updated: 15 May 2019 3:39 PM GMT)

ஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது.

அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டத்தில் கோடைவெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. அதில் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில கடைகளில் இருந்த விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. அதைத்தொடர்ந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த மழையின் காரணமாக தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளியுடன் பெய்த மழை காரணமாக மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் பகுதியில் பழமையான அரசமரத்தின் கிளை முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் அந்த மின்கம்பம் உடைந்து சேதமானது. இதே போல் சின்னவரிகம் ஊராட்சி பகுதியில் மின்கம்பங்கள் உடைந்து சாலையில் மின்வயர்கள் தொங்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்தது. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. இந்த சூறாவளி காற்றினால் வீட்டின் கூரை தகடுகள் சிமெண்ட் சீட்டுகள்,ஓடுகள் காற்றில் பறந்தன.

மேலும் அகரம்சேரி பகுதியில் 5–க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சுமார் 30–க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் காற்றில் உடைந்து உள்ளது. இதனால் சுமார் 15–கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் இருளில் ழூழ்கியுள்ளது, பள்ளி கொண்டாவில் இருந்து ஒடுகத்து£ர் செல்லும் பள்ளிகுப்பம் சாலையில் 50–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்துள்ளது இதனால் அந்தவழியாக செல்லும் வாகனங்கள் மாற்று சாலையில் செல்கின்றது. இதைதொடர்ந்து இந்த பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் ஆலங்கட்டிமழை பெய்தது. 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் ழூழ்கியுளளதால் மின்வாரிய ஊழியர்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் சாரம் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story