இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு 3–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


இளம்பிள்ளை அருகே,  குடிநீர் கேட்டு 3–வது நாளாக  பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2019 10:00 PM GMT (Updated: 15 May 2019 3:48 PM GMT)

இளம்பிள்ளை அருகே குடிநீர் கேட்டு நேற்று 3–வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பிள்ளை, 

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேருராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 13–ந் தேதி மற்றும் 14–ந் தேதிகளில் அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 3–வது நாளாக இப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.

இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் சரிவர கிடைக்கவில்லை எனவும், குடிநீர் வசதி செய்து தர வேண்டியும், நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் இளம்பிள்ளை–சின்னப்பம்பட்டி சாலையில் புவன கணபதி கோவில் அருகே திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேருராட்சி செயல் அலுவலர் தாமோதரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது.


Next Story