சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம் - போலீசாருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு


சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம் - போலீசாருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:13 PM GMT)

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசாருக்கு பணியிடங்கள் நேற்று ஒதுக்கப்பட்டன.

கோவை,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்காக 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வாக்காளர்களை கவரும் வகையில் ஆர்.வி.எஸ். கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு வாக்காளர்கள் நிழலில் நின்று வாக்களிக்கும் வகையில் சாமியானா, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அந்த வாக்குச்சாவடியை முழுமையாக அலங்கரிக்கும் பணியும், வெப் கேமராக்கள் பொருத்தும் பணி ஆகியவையும் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சுழற்சி (ரேண்டம்) முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ணன், தேர்தல் பொதுபார்வையாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் கணினி மூலம் போலீசாருக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சூலூர் இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள் ளன. இதில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கணினி மூலம் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. போலீசார் தவிர்த்து 200 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவர்கள் தவிர குஜராத்தில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்) 240 பேர் ரெயில் மூலம் சூலூர் வந்துள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு சக்கர நாற்காலி வீதம் 324 சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

இந்த இடைத்தேர்தலில் 778 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 388 கட்டுப்பாட்டு எந்திரம், 422 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி நாளை (இன்று) நிறைவு பெறும்.

சின்னங்கள் பொருத்தப்பட்டதும் அந்த எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story