மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்வோம்; வாடகைக்கு குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்வோம்; வாடகைக்கு குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 15 May 2019 11:30 PM GMT (Updated: 15 May 2019 9:32 PM GMT)

மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்வோம் என்று திருப்பூர் பாளையக்காடு பகுதியில் வாடகைக்கு குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாங்கள் பாளையக்காடு ஆர்.எஸ்.புரத்தில் 4 வீதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வெளியூரை சேர்ந்த நாங்கள் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகிறோம். ஆர்.எஸ்.புரம் மெயின் வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் உள்ளது. கடந்த காலங்களில் எங்கள் பகுதியில் வசிக்கும் சொந்த வீட்டுக்காரர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் சேர்ந்து சித்திரை திருவிழா கொண்டாடி வந்தோம்.

இந்த ஆண்டு சொந்த வீட்டுக்காரர்களாக உள்ள 13 பேருக்கும், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிடுவதில் தகராறு கிளம்பியது. இதனால் நாங்கள் திருவிழாவில் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி சென்றோம். இருப்பினும் மேற்கண்ட 13 பேர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி போலீசார் எங்கள் பகுதியில் உள்ள 200 வீடுகளில் இரவில் புகுந்து சோதனை செய்தனர். பொய்புகாரில் ஒருவரையும் கைது செய்தனர்.

அதன்பிறகும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் குழந்தைகளில் வீதியில் நடமாடுவதில் கூட கட்டுப்பாடுகள் விதித்தனர். இதுகுறித்து கேட்டால் வாடகைக்கு குடியிருப்பவர்களை உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லுங்கள் என்று எங்களுடைய வீட்டு உரிமையாளர்களிடம் வற்புறுத்துகிறார்கள். கடந்த 10–ந் தேதி கோவிலுக்கு அருகே கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களிடம் 13 பேர் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்து போலீசார் வந்து சிறுவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து விட்டு அதன்பிறகு அனுப்பினார்கள்.

சொந்த வீட்டுக்காரர்களாக உள்ள 13 பேரால், வாடகைக்கு குடியிருக்கும் எங்களை போன்ற 200 குடும்பத்தினர் வேலைக்கு செல்ல முடியவில்லை. போலீசார் மூலமாக தொடர்ந்து மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே நாங்கள் அந்த பகுதியில் குடியிருக்க முடியும். இல்லையென்றால் 200 குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்கள் ரே‌ஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்து செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story