100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 9:34 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலத்தில் திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை, எடையூர், சங்கேந்தி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வந்தனர்.

தற்போது தனியார் பள்ளியின் மோகத்தாலும், அரசு பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோராலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும், இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த பள்ளியில் படித்த முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த பள்ளியை நவீனப்படுத்தி சிறப்பு வசதிகள் உள்ள பள்ளியாக மாற்றி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்தனர்.

சுற்றுச்சுவர்

மேலும் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தையே நிலைகுலைய வைத்த கஜா புயலால் பள்ளியின் சுற்றுச்சுவர் கீழே சாய்ந்ததோடு உள்ளே இருந்த மரங்களும் சாய்ந்துள்ளன. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டாமல், மரங்களையும் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவரை கட்டி உள்ளே சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story