காரைக்குடி அருகே அண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பி கைது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்


காரைக்குடி அருகே அண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பி கைது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:43 PM GMT)

காரைக்குடி அருகே தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே செட்டிநாடு பக்கம் உள்ள சூரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மீனாள். இவருக்கு பிரகாஷ் (29), பிரதீப் (வயது 24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பிரதீப் சென்னையில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் பிரகாஷ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் மீனாளிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை அவரது தம்பி பிரதீப் தட்டிக் கேட்டார்.

இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். அண்ணன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பிரதீப் அதிகாலை 3 மணிக்கு திடீரென எழுந்தார். பின்னர் அங்கிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.

இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிரதீப் தப்பி ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பிரகாஷின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணனை தம்பியே உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story