டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை அரவக்குறிச்சி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை அரவக்குறிச்சி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 10:08 PM GMT)

டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை என அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.வி.செந்தில்நாதன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின்ரோடு, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்தவேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக (செந்தில்பாலாஜி) நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. எனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

அரவக்குறிச்சி, பரமத்தியிலுள்ள 50 ஊராட்சிகளுக்கும் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பது, புகளூரில் ரூ.490 கோடியில் கதவணை அமைக்கும் பணிகளை செயல்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்னர் உடனடியாக நிறைவேற்றப்படும். மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

நதிநீர் இணைப்பு

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின்வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.

பிரதமர் பதவியேற்றவுடன் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம். அதனால் தமிழகம் முழுவதும் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை என்கிற நிலையே இருக்காது.

பதிலடி கொடுங்கள்

ஸ்டாலின் அளிக்கும் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலீப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலீப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. இன்று வெளியே போய் கட்சியை ஆரம்பித்த ஒரே ஆள் டி.டி.வி.தினகரன் தான். அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குசேகரிப்பின்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பரஞ்ஜோதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன்இருந்தனர்.


Next Story