வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; மதுரையை சேர்ந்த 4 பேர் கைது


வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; மதுரையை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2019 10:38 PM GMT (Updated: 15 May 2019 10:38 PM GMT)

வேலூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடிவரை மோசடி செய்த மதுரையை சேர்ந்த 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

வேலூர்,

மதுரையை சேர்ந்தவர்கள் சரவணக்குமார் (வயது45), நமச்சிவாயம் (45), கணேசன் (43), கதிரவன்(43). இவர்கள் 4 பேரும் சேர்ந்து மதுரை, வேலூர், விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனம் தொடங்கினர்.

கடந்த 2011-ம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தை அவர்கள் தொடங்கி 4 பேரும் அதன் இயக்குனர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் பொதுமக்களை சந்தித்து தங்கள் நிதிநிறுவனத்தில் தவணைமுறையில் பணம் கட்டினால் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு அந்த தொகைக்கு நிலம் தருவதாக கூறி உள்ளனர். இதை நம்பி பொதுமக்கள் பணம் கட்டத்தொடங்கினர்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம்கட்டி வந்தனர். 2016-ம் ஆண்டுவரை சுமார் ரூ.50 கோடிவரை வசூல் செய்துள்ளனர். பொதுமக்கள் கட்டிய பணத்தில் நிலம் வாங்கிய 4 பேரும் அந்த நிலங்களை தங்கள் பெயரிலும், தங்கள் நிறுவனத்தின் பெயரிலும் பதிவுசெய்துள்ளனர்.

பணம் கட்டியவர்களுக்கு நிலம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பணம் கட்டி பாதிக்கப்பட்ட வேலூரை சேர்ந்த விக்ரம் என்பவர் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின்பேரில், வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ரூ.50 கோடிவரையில் மோசடி செய்துவிட்டு தலைமறைவான 4 பேரும் மதுரையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மதுரைக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கணேசன், கதிரவன் ஆகிய 4 பேரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆவணங்களையும் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட 4 பேரும் சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story