பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்


பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 10:42 PM GMT)

பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 19-ந்தேதி அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பிறகு, 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கணினி திரையில் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது பற்றியும், துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவம் பணியாற்றுவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகன தணிக்கை தீவிரம்

நாளை (வெள்ளிக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருப்பதால், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் ஏதும் எடுத்து செல்லப்படுகிறதா? விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஆங்காங்கே தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகன தணிக்கையின் போது துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் துணை ராணுவத்தினருடன் சேர்ந்தே அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் போலீஸ்துறை சார்பில் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

பணம் வினியோகம்

இதைத்தவிர விதிகளை மீறி டோக்கன்கொடுப்பது உள்ளிட்ட நூதன முறையில் பணவினியோகம் யாரேனும் மேற்கொள்கின்றனரா? பகுதிவாரியாக பணம் கொடுக்க அரசியல் கட்சியினர் கணக்கீடு ஏதும் செய்கின்றனரா? என அரவக்குறிச்சி தொகுதியில் உளவு பிரிவினரும் தேர்தல் பிரசாரம் நடக்கும் இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடைசி கட்டத்தில் சரமாரியாக அரவக்குறிச்சி தொகுதியில பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையிலே தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனை கருத்தில் கொண்டும் தொகுதியில் சந்தேகத்திற்குரிய இடங்களை பார்வையிட்டும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தவிர போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story