பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு


பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 10:57 PM GMT)

பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த விபத்தில் மனைவி- மகள் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த மேலசங்கரன்குழி சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (வயது 49). இவர் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி சுதா (42). இவர்களது மகள் ஸ்ரீபத்மபிரியா (16). இவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எனவே மகளை பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் ஸ்ரீபத்மபிரியாவை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்தனர். பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கை முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர்.

விபத்து

அப்போது மோட்டார் சைக்கிளை நாககிருஷ்ணமணி ஓட்டினார். அவருக்கு பின்னால் மகள் ஸ்ரீபத்மபிரியா மற்றும் மனைவி சுதா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்கள் கேப் ரோட்டில் கணேசபுரம் திருப்பம் அருகில் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு லாட்ஜ் முன்னால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் டிரைவர் திடீரென்று கார் கதவை திறந்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத நாககிருஷ்ணமணி மோட்டார் சைக்கிளுடன் கார் கதவில் மோதினார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஸ்ரீபத்ம பிரியாவும், சுதாவும் நடுரோட்டில் விழுந்தனர். நாககிருஷ்ணசாமி சாலையோரத்தில் விழுந்தார். அந்த வழியாக பறக்கை நோக்கி சென்ற மினி பஸ் ரோட்டில் விழுந்து கிடந்த தாய் மற்றும் மகள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் உடல் நசுங்கிய ஸ்ரீபத்மபிரியாவும், சுதாவும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். நாககிருஷ்ணமணி கீழே விழுந்ததில் இடதுகால் தொடைப்பகுதியில் பலத்த காயம் அடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்தது.

பெரும் சோகம்

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜன், சசீதரன் ஆகியோரும் சேர்ந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுதா, ஸ்ரீபத்மபிரியா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். நாககிருஷ்ணமணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கண் முன்னே மனைவியும், மகளும் விபத்தில் சிக்கி இறந்ததை அறிந்து கதறி அழுதது ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.

சென்னை பதிவெண் கொண்ட கார்

விபத்தில் இறந்த தாய், மகள் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மினிபஸ் டிரைவரான புத்தளம் அருகே உள்ள கல்லடிவிளையைச் சேர்ந்த சுகுமாரன் மீது நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான சென்னை பதிவெண் கொண்ட காரையும், காரை ஓட்டி வந்த டிரைவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் நாகர்கோவிலில் நேற்று பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story