15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத நாகசமுத்திரம் குளம் - கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் வேதனை


15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத நாகசமுத்திரம் குளம் - கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 15 May 2019 10:59 PM GMT (Updated: 15 May 2019 10:59 PM GMT)

திண்டுக்கல்லில் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத நாகசமுத்திரம் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே நாகசமுத்திரம்குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த குளத்துக்கு சிறுமலையில் இருந்து மழைநீர் வந்தது. இதன்மூலம் முத்தழகுபட்டி, பள்ளப்பட்டி பகுதிகளில் 120 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றது. காய்கறி, நெல் உள்பட அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டன.

ஆனால், காலப்போக்கில் மழைநீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது. தற்போது திண்டுக்கல் நகரில் பெய்யும் மழையில் கிடைக்கும் தண்ணீரும், கழிவுநீரும் மட்டுமே நாகசமுத்திரம்குளத்துக்கு வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு புற்கள் வளர்க்கப்படும் இடமாக மாறிவிட்டது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்நடைகளுக்கு தேவையான புற்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல் சில விவசாயிகள் மட்டும் கீரை சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த குளத்தை தூர்வாரி பல ஆண்டுகளாகி விட்டது. இதனால் குளத்தின் பெரும்பகுதி மேடாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று குளத்தின் கரையில் விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சின்னப்பன், செபஸ்தியான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது குளத்தை தூர்வார வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ் கூறுகையில், நாகசமுத்திரம் குளத்தை தூர்வாரி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, குளம் மற்றும் குளத்துக்கு மழைநீர் வரும் கால்வாயை தூர்வார வேண்டும். மேலும் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எனவே, நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்த பின்னரே குளத்தில் விட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story