பெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல்


பெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 May 2019 11:53 PM GMT (Updated: 15 May 2019 11:53 PM GMT)

பெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருடிய தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளாவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் பணம் நிரப்பும் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் கிஷோர் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி சாந்தி நகர் அருகே லாங்போர்டு ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நிரப்பப்பட்ட ரூ.47 லட்சத்து 83 ஆயிரமும் திருடப்பட்டது.

அதே நாளில் ஆர்.பி.எல். ரோட்டில் உள்ள மற்ெறாரு ஏ.டி.எம். மையத்தில் நிரப்பப்பட்ட ரூ.51 லட்சத்து 30 ஆயிரமும் திருட்டுப்போய் இருந்தது. அதாவது அந்த ஏ.டி.எம். எந்திரங்களை உடைக்காமல், அதனை நைசாக திறந்து ஒட்டு மொத்தமாக ரூ.99 லட்சத்து 13 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை திருடியது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்த கிஷோர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, துணை போலீஸ் கமிஷனர் இஷாபந்த் உத்தரவின் பேரில் தலைமறைவாகி விட்ட கிஷோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கிஷோரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆடுகோடி அருகே சந்திரப்பா நகரை சேர்ந்த கிஷோர் (வயது 28), இவரது நண்பரான பேகூரை சேர்ந்த ராகேஷ்(37) ஆகிய 2 பேரையும் ஆடுகோடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிய கிஷோர், நகரில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்துள்ளார். அவ்வாறு பணம் நிரப்ப செல்லும் ஏ.டி.எம். எந்திரங்களை திறக்கும் சாவி மற்றும் ரகசிய குறியீட்டு எண்கள் கிஷோரிடம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தியும், எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் தனது நண்பரான ராகேசுடன் சேர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.99 லட்சத்து 13 ஆயிரத்தை திருடி சென்றிருந்தனர்.

அந்த மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த திருட்டில் ஈடுபட்டது கிஷோர் தான் என்று தெரியவந்தது. இதையடுத்து, கிஷோர், ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் திருடிய ரூ.95 லட்சம், விைல உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேர் மீதும் ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு சுனில்குமார் கூறினார். பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் இஷாபந்த் உடன் இருந்தார்.

முன்னதாக கைதான 2 பேரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 லட்சம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பார்வையிட்டார்.

Next Story