காடையாம்பட்டி அருகே, சீராக குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை


காடையாம்பட்டி அருகே, சீராக குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 2:59 PM GMT)

சீராக குடிநீர் வழங்கக்கோரி காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளி பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினை குறித்து காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 12–ந்தேதி காருவள்ளி–ஓமலூர் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சீராக குடிநீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து காருவள்ளியில் ஒரே இடத்தில் 10 குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும அதிலும் சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே முன்பு போலவே ஒவ்வொரு தெருவிலும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் திருட்டுத்தனமாக தண்ணீரை உறுஞ்சுவதை தடுக்க இரும்பு மெயின் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரியும் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்தானம் ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) குமரேசனிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story