தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 3:56 PM GMT)

தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு இதர மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் சரியான முகவரிக்கு செல்வதற்கு சிவகாசியை சேர்ந்த ஆபிரகாம் (வயது45) உதவி செய்து வந்தார். இவர் ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவரின் செல்போனை திருடி விற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராம்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆபிரகாமை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஆபிரகாம் நேற்று மதியம் மது குடித்து விட்டு அண்ணாநகர் பகுதியில் ஊத்துக்கோட்டை- திருப்பதி சாலை ஓரமாக நின்ற ஆல மரத்தில் ஏறி விட்டார்.

தன்னை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவாறு மரத்தில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று தொடர்ந்து மிரட்டி கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தேர்வாய்கண்டிகையில் உள்ள தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவாஜி, பரசுராமன் ஆகியோரின் தலைமையில் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மரத்தின் கீழ் பகுதியில் மின்கம்பிகள் தொங்கி கொண்டிருந்ததால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மரத்தில் இருந்து ஆபிரகாம் கீழே குதித்து விட்டால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக ஏராளமானோர் தார்ப்பாய் பிடித்து நின்றனர். பின்னர் தீயணைப்புத்துறை வீரர்கள் ஏணி மூலம் மரத்தின் மேலே ஏறினர். அதே நேரத்தில் ஆபிரகாம் மரத்தின் ஒரு பகுதி வழியாக கீழே இறங்கி விட்டார். இதனால் போலீசார் மற்றும் இதர அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பின்்னர் போலீசார் ஆபிரகாமை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனை பார்ப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் ஊத்துக்கோட்டை- திருப்பதி இடையே ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story