பர்னிச்சர் கடைக்குள் புகுந்த திருடன் : கண்காணிப்பு கேமராவில் பதிவானது


பர்னிச்சர் கடைக்குள் புகுந்த திருடன் : கண்காணிப்பு கேமராவில் பதிவானது
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 4:02 PM GMT)

ஈரோட்டில் பர்னிச்சர் கடைக்குள் திருடன் புகுந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒரு தனியார் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. இந்த கடையை வழக்கமாக இரவு 9.30 மணிக்கு பூட்டிவிட்டு கடையின் உரிமையாளர்களும், கடை ஊழியர்களும் சென்று விடுவார்கள். பின்னர் மறுநாள் காலையில் 9 மணிக்கு மீண்டும் கடை திறக்கப்படும்.

அதன்படி கடந்த 12–ந் தேதி இரவு கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் 13–ந் தேதி காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடை மற்றும் அலுவலகத்தின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேஜை டிராயரும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடையில் பணம் எதுவும் இல்லாததால் திருட்டு எதுவும் நடக்கவில்லை. எனினும் கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் திருட்டு சம்பவம் நடந்தது பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் பார்வையிட்டனர்.

அப்போது திருடன் ஒருவன் மேற்கூரையை உடைத்து கடைக்குள் இறங்குவதும், டார்ச் லைட் வெளிச்சத்தில் பீரோக்கள் மற்றும் மேஜைகளை தேடிச்சென்று உடைத்துப்பார்ப்பதும் பதிவாகி இருந்தது. மேலும், கடைக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்கினையும் அந்த நபர் அறுத்து எறிவதும் பதிவாகி இருக்கிறது.

சம்பவம் 13–ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நடந்து உள்ளது. கடைக்குள் புகுந்த திருடன் லுங்கியும், பனியனும் அணிந்து இருந்தான். அவனுடைய உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதைக்கொண்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டு கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் திருட்டு சம்பவங்கள் தினசரி அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொட்டை மாடியில் காயப்போட்ட துணிகளை மர்ம கும்பல் திருடிச்சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல் பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து பூட்டை உடைத்து திருடும் கும்பலும் ஈரோட்டில் சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த நிலையில் பூட்டி இருந்த பர்னிச்சர் கடையின் மேற்கூரையை உடைத்து திருடன் புகுந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டத்தை குறைக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story