அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்


அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 5:32 PM GMT)

அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிக்காக, நெல்லை மாநகர பகுதியில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றின் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நீர்த்தேக்க பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக பேட்டை காமராஜர் பள்ளி மாநகராட்சி வளாக பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து நெல்லை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக தற்போது நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து அருணகிரி தியேட்டர் வரையிலும் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் தொடங்கியது.

இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பேட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், கடையம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நெல்லையப்பர் கோவில் சன்னதி, சந்திப்பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக மாற்றி விடப்பட்டு உள்ளன.

அதேபோல் தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் பஸ்கள் வழக்கம்போல் குற்றாலம் ரோடு, தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் செல்கிறது.

கண்டியப்பேரி-பழையபேட்டை செல்லும் சாலை குறுகலாக காணப்படுகிறது. தென்காசி, செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தென்காசியில் இருந்து நெல்லை வழியாக வரும் கனரக வாகனங்களை வேறு வழியில் மாற்றி விட வேண்டும். கண்டியப்பேரி- பழையபேட்டை சாலையை இருவழி சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இன்னும் 2 மாதத்துக்குள் அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கம்போல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story