முதல்-மந்திரி பதவி தற்போது காலியாக இல்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி


முதல்-மந்திரி பதவி தற்போது காலியாக இல்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 6:25 PM GMT)

முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். அதனால் முதல்-மந்திரி பதவி குறித்து பேச இது சரியான தருணம் கிடையாது. முதல்-மந்திரி பதவி தற்போது காலியாக இல்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரியை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யலாம். நான் உள்பட பலர் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளோம்.

சித்தராமையா டுவிட்டரில் கூறிய கருத்துக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். சித்தராமையா மற்றும் எச்.டி.ரேவண்ணா இருவரும் நண்பர்கள். அதனால் முதல்-மந்திரி பதவிக்கு எச்.டி.ரேவண்ணா கூட தகுதியானவர் என்று சித்தராமையா கூறியுள்ளார். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா எம்.பி. கூறியதாவது:-

மல்லிகார்ஜுன கார்கே நீண்ட காலத்திற்கு முன்பே முதல்-மந்திரி ஆகியிருக்க வேண்டும் என்று குமாரசாமி கூறியது உண்மை தான். தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. பாபுஜெகஜீவன்ராமுக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போனது.

முதல்-மந்திரி பதவி குறித்து பேச இது சரியான நேரம் இல்லை. இப்போது இடைத்தேர்தல் நடக்கிறது. நேரம் வரும்போது, தலித்துகளுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பது குறித்து குரல் கொடுப்போம்.

கூட்டணி அரசு அமைந்தபோது, முதல்-மந்திரி பதவியில் குமாரசாமியே 5 ஆண்டுகள் நீடிப்பார் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அதை காங்கிரஸ் பின்பற்றுகிறது. ஆனால் முதல்-மந்திரி பதவி குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகளை கூறுவது தவறு.

தேவராஜ் அர்ஸ் நல்ல பணிகளை செய்தார். நல்ல பணிகளை யார் செய்தாலும் அது மக்களின் மனதில் நிலைத்து நிற்கும். ஜனநாயகத்தில் மாற்றத்தை ஒப்புக்கொண்டு பணியாற்ற வேண்டும். இவ்வாறு கே.எச். முனியப்பா கூறினார்.

Next Story