திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றுக்குள் கிடந்த ஆதார் அட்டைகள் கிராம மக்கள் அதிர்ச்சி


திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றுக்குள் கிடந்த ஆதார் அட்டைகள் கிராம மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2019 11:15 PM GMT (Updated: 16 May 2019 6:34 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றுக்குள் ஆதார் அட்டைகள் கிடந்தன. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமம் தேவர்பண்ணை ஆற்றங்கரை தெரு பகுதி வழியாக செல்லும் முல்லையாற்றில் நேற்று 2 சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் இல்லாத அந்த ஆற்றுக்குள் இறங்கி சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

அப்போது சாக்கு மூட்டைகளில் ஆதார் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சாக்கு மூட்டைகளில் இருந்த ஆதார் அட்டைகளை கீழே கொட்டி அதில் தங்களுக்கு உரிய ஆதார் அட்டைகள் உள்ளதா? என தேடிப்பார்த்தனர். அதில் ஒருசிலருக்கு உரிய ஆதார் அட்டைகள் அங்கு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார் அட்டைகள் இதுவரை கிடைக்க வில்லை. தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் என பல அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் ஆதார் அட்டை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எப்போது சென்று கேட்டாலும், ஆதார் அட்டை தயார் செய்யும் பணி நடப்பதாக அதிகாரிகள் அலட்சியமாக கூறி வந்தனர். இந்த நிலையில் ஆற்றுக்குள் ஆதார் அட்டைகள் கிடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. 3500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் ஆற்றுக்குள் கிடந்ததாக தெரிகிறது.

ஆதார் அட்டைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்காமல் ஆற்றுக்குள் வீசி சென்றது யார்? என்பதை கண்டறிய மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆற்றுக்குள் கிடந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்துக்கும் தற்போது ஆதார் அட்டை அவசியமாகி விட்டது. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டைகள் சம்பந்தப்பட நபர்களிடம் ஒப்படைக்கப்படாமல், ஆற்றுக்குள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story