தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 6:49 PM GMT)

தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை-கும்பகோணம்-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதிலும் குறிப்பாக தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்கு(மொத்தம் 50 கிலோ மீட்டர் தூரம்) 1½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. மேலும் இந்த வழியில் உள்ள சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழி சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-விக்கிரவாண்டி சாலையையும் வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையில் 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலை வரை 3-வது பிரிவாகவும் பணிகளை ஒதுக்கியது.

தஞ்சை-விக்கிரவாண்டி இடையே உள்ள மொத்த தூரம் 165 கி.மீ. இந்த 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இது தவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன இந்த சாலைக்காக 150 அடி அகலத்திற்கு 4 வழிச்சாலைகள் அமைப்பதற்காக 180 அடிக்கு(60 மீட்டர் அகலம்) மண் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் புறவழிச்சாலையை யொட்டியுள்ள சமுத்திரம் ஏரியில் சாலை அமைப்பதற்காக பொக்லின் எந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டுள்ளது. இதற்காக மண் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். எனவே அடுத்த ஆண்டுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டிக்கு செல்லும் பயண நேரம் 5 மணி நேரத்தில் செல்வது 3 மணி நேரமாகவும், தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு 1½ மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாகவும் பயண நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story