பா.ஜனதா துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் விடுதலை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


பா.ஜனதா துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் விடுதலை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 8:38 PM GMT)

பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேரை விடுதலை செய்து நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி, தற்போது மாநில துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி நடைபயிற்சி சென்ற போது ஒரு கும்பல் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது.

எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஆங்காங்கே பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 32), இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நவாஸ் (33), பிரபு என்ற அப்துல் அஜிஸ் (32), ஷாஜி (32) மற்றும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது சாலின் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பாண்டியராஜ் விசாரித்தார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நேற்று காலை கோர்ட்டில் ஆஜரானார்கள். தொடர்ந்து நீதிபதி பாண்டியராஜ் தீர்ப்பு கூறினார்.

அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் 5 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். தீர்ப்பையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விடுதலை செய்யப்பட்ட 5 பேரில் அப்துல் சமீம் மற்றும் செய்யது அலி நவாஸ் ஆகியோர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு தொடர்பாக பூந்தமல்லி சிறையில் இருந்தனர். முகமது சாலின் என்பவர் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக பெங்களூரு சிறையில் இருந்தார். எம்.ஆர்.காந்தி வழக்கு விசாரணை காரணமாக பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டாலும் பிற வழக்குகள் இருப்பதால் அப்துல் சமீமும், செய்யது அலி நவாசும் மீண்டும் பூந்தமல்லி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகமது சாலின் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 2 பேர் மீது வேறு வழக்குகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

Next Story