புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்புகளை அகற்றி நவீன சிகிச்சை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை


புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்புகளை அகற்றி நவீன சிகிச்சை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 8:42 PM GMT)

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்புகளை அகற்றி நவீன சிகிச்சை செய்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் வேதி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவுகள் மூலம் கடந்த 6 மாதங்களாக புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளும், அதற்குப்பின் தேவைப்படும் கீமோதெரப்பி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையும், 294 நோயாளிகளுக்கு கீமோதெரப்பி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று முறை பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சை செய்தவர் தாழக்குடியைச் சேர்ந்த ஜெயந்தி (வயது 55).

அதன்பிறகும் அவருக்கு புற்றுநோய் மீண்டும் ஏற்பட்ட நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பிரனித் பெல்ஸ், புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திர பாண்டியன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரபீக் மீரான், ஆக்‌ஷி தர்ஷினி உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களால் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஜெயந்திக்கு நெஞ்சுக்கூடு எலும்புகளில் புற்றுநோய் பரவி இருந்ததால் 3 எலும்புகள் அகற்றப்பட்டு, அதற்கு ஈடாக முதுகில் இருந்து சதை எடுத்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. தற்போது இவர் அறுவை சிகிச்சை பின்கவனிப்பு பகுதியில், உடல் தேறிவரும் நிலையில் உள்ளார். இவருக்கு தேவைப்படும் கீமோதெரப்பி சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

இதைப்போன்று வாய் பகுதியில் காணப்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப்பிரிவு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையும், புற்றுநோய் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

மேலும் எனது முயற்சியால் புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. கதிர்வீச்சு சிகிச்சைக்கான சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது. குமரி மாவட்ட மக்கள் சிறப்பு புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அரசு மருத்துவ கல்லூரியிலேயே பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு டீன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அப்போது ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் கலைக்குமார், ரெனிமோள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story