திங்கள்சந்தை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமரா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் திறந்து வைத்தார்


திங்கள்சந்தை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமரா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 8:55 PM GMT)

திங்கள்சந்தை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் திறந்து வைத்தார்.

அழகியமண்டபம்,

இரணியல் போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட திங்கள்சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு, வழிபறி போன்றவை நடந்து வருகிறது. இதை தடுக்க முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைந்து நன்கொடை வசூல் செய்து ரூ.15 லட்சம் செலவில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தனர். குறிப்பாக திங்கள்சந்தை சந்திப்பு, இரணியல், பேயன்குழி, சுங்கான்கடை போன்ற முக்கிய பகுதிகளில் கேமரா அமைப்பட்டுள்ளது. இவற்றின் கட்டுப்பாட்டு அறை இரணியல் போலீஸ் நிலையத்தில் உள்ளது.

திறப்பு விழா

கண்காணிப்பு கேமராக்களின் திறப்பு விழா நேற்று மாலை திங்கள்சந்தையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கி கேமராக்களை திறந்து வைத்தார். இரணியல் இன்ஸ்பெக்டர் ஏசுபாதம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், கார்த்திகேயன் (பயிற்சி), போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, பாரத் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நன்கொடை வழங்கியவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வாழ்த்தி பேசி நினைவு பரிசு வழங்கினார்.

Next Story