11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படுமா?


11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 9:13 PM GMT)

11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அசூர் என்ற இடத்தில் தொடங்கி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் வரை 43 கிலோ மீட்டர் நீளத்திற்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணியை கடந்த 2008-ம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியது.

5 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அசூர் முதல் பஞ்சப்பூர் வரை உள்ள 26 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பகுதி, பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான 17 கிலோ மீட்டர் நீளத்திற்கு மற்றொரு பகுதி என 2 பிரிவுகளாக இந்த திட்டத்தை நிறைவேற்ற போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள், போராட்டம் காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அசூர் முதல் பஞ்சப்பூர் வரையிலான பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் அளவிற்கு தான் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம், குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சிறிய அளவிலான பாலங்கள் கட்டுமான பணியானது இன்னும் தொடங்கப்படவே இல்லை.

அசூரில் தஞ்சாவூர் சாலையை இணைக்கும் இடத்தில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு எந்தவித பணிகளும் நடக்கவில்லை. மேலும் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு குளம் வழியாக சாலை செல்வதற்கு பதிலாக மாற்று பாதையில் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையோடு இணைத்து வாகன போக்குவரத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான 17 கிலோ மீட்டர் வரையில் இதுவரை ஒரு இடத்தில் கூட சாலை அமைக்கப்படவில்லை. சில இடங்களில் குறும்பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. நீர் நிலைகள் வழியாக சாலை அமைவதை தவிர்க்கும் வகையில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு மாற்றுப்பாதைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. மறு வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்ட புதிய திட்டம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இந்த திட்டத்திற்கு புதிதாக அனுமதி வழங்க தேவையில்லை. திட்டத்தின் தொடக்க காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியே போதுமானது என கூறி திருப்பி அனுப்பி விட்டது. ஆனாலும் இந்த பகுதியில் இன்னும் பணி தொடங்கப்படாமல் அப்படியே நிலுவையில் உள்ளது.

இதனால் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த அரைவட்ட சுற்றுச்சாலை பணி மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி. இந்த அரை வட்ட சுற்றுச்சாலை பணி நிறைவடைந்தால் தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் திருச்சி நகருக்குள் வரவேண்டிய அவசியமே ஏற்படாது.

இதன் மூலம் கனரக வாகனங்களால் திருச்சி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியும் வெகுவாக குறையும். மேலும் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் சுமார் ரூ.80 கோடியில் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் செயல்பாட்டுக்கு வராத காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான மத்திய வணிக வளாகத்திற்கு, வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் லாரிகள் நேரடியாக செல்ல முடியும்.

எனவே திருச்சி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரைவட்ட சுற்றுச்சாலை பணி எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘அசூர் முதல் பஞ்சப்பூர் வரையிலான அரை வட்ட சுற்றுச்சாலை பணியை ஏற்கனவே செய்து வந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீதம் உள்ள பணிகளை ரூ.120 கோடி திட்ட மதிப்பீட்டில் செய்து முடிக்க டெண்டர் விடப்பட்டது. இடையில் பொது தேர்தல் வந்து விட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்ததும் இந்த பணியை உடனடியாக தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான பணியை பொறுத்தவரை மறு வடிவமைப்பு செய்யப்பட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி தேவை இல்லை என கூறப்பட்டு விட்டாலும், விவசாயிகள் தொடர்ந்த வழக்குகள் இன்னும் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது உள்ளது. அந்த அறிக்கை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்’ என்றனர்.

Next Story