மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க சிறப்புப்படை அமைப்பு : போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வேலூர்,
பாலாற்றங்கரையோர பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணி, வாகன தணிக்கை போன்றவற்றில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர். ஆனாலும் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டி, சரக்கு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் மணல் கடத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது.
இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 ஆயுதப்படை போலீசார் அடங்கிய தனிப்படையினர் மணல் கடத்தலை தடுக்க இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் பேரில் சிறப்புப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 10 ஆயுதப்படை போலீசார் இடம் பெற்று உள்ளதாக தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.