கோடை மழை தொடருவதால் கோழிகளில் தீவன எடுப்பு உயர தொடங்கும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோடை மழை தொடருவதால் கோழிகளில் தீவன எடுப்பு உயர தொடங்கும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 5:08 PM GMT)

கோடை மழை தொடருவதால் அடுத்த 4 நாட்களுக்கும் கோழிகளில் தீவன எடுப்பு உயர தொடங்கும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 மி.மீட்டர் அளவிலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 21-ந் தேதி 4 மி.மீட்டர் அளவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றானது 4 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். மேலும் வெப்பநிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், 21-ந் தேதி 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 82.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முதல் 3 நாட்களுக்கு 75 சதவீதமாகவும், கடைசிநாள் 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முதல் 3 நாட்களுக்கு 45 சதவீதமாகவும், கடைசி நாள் 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்்கு பரவலான கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவில் 82.4 டிகிரியாகவும் நிலவி, வெப்ப அயற்சிக்கு வாய்ப்பு உள்ளதாக இருக்கும். இருப்பினும், ஈரமான தென்மேற்கு காற்று ஆரம்பமாகி உள்ளதால், மாலையில் மேகமூட்டங்கள் உருவாகி வெப்ப அளவுகள் குறையும். காற்றின் வேகம் குறைவாகவே காணப்படும். கோடை மழை தொடரும் என்பதால், அடுத்த 4 நாட்களுக்கும் தீவன எடுப்பு உயர தொடங்கும். முட்டை எடை சம்பந்தமான குறைபாடுகள் குறைந்து காணப்படும். தொடர்ந்து கோடைக்கான தீவன பராமரிப்பை பின்பற்ற வேண்டும்.

கடந்்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் வெள்ளை கழிச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாளுமாறும், உயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story