ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா இறுதிகட்ட பிரசாரம்


ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா இறுதிகட்ட பிரசாரம்
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 5:21 PM GMT)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு, அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்து பேசினர்.

தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையா தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்றுடன் பிரசாரம் முடிவடைவதால் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா காலையில் தருவைகுளத்தில் இருந்து இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் தாளமுத்துநகர் ராம்தாஸ்நகர் பகுதியில் வேட்பாளர் சண்முகையா பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அங்கு திரண்டு இருந்த மக்களிடையே தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. வாக்கு கேட்டு பேசியதாவது:-

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இல்லை. இதனால் அங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஆகையால் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வெற்றி பெற்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார். தொடர்ந்து அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படும். குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 40 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த பஞ்சாயத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பியும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சண்முகையாவும் வெற்றி பெறும் போது, தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். தொகுதி வளர்ச்சி பெற தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இதேபோன்று தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்களிக்குமாறு எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து பேசினர். தொடர்ந்து சிறிது நேரம் தாளமுத்துநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, ஆஸ்டின் எம்.எல்.ஏ, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.டி.சி.ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி பகுதி செயலாளர் சரவணக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழினியன், வக்கீல் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story