ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு


ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 5:24 PM GMT)

ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று மாலை 5 மணிக்கு புதியம்புத்தூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இருந்து இறுதிகட்ட வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், மணிகண்டன், ராஜலட்சுமி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் சரத்குமார், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். கட்சி தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் முன்னே செல்ல தொடர்ந்து வேட்பாளர் திறந்த வாகனத்தில் ஓட்டு கேட்டபடி சென்றார். ஊர்வலம் முப்புலிவெட்டி, தெற்கு பரும்பூர், வடக்கு பரும்பூர் வழியாக மாலை 5-30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி திடல் வந்தடைந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து அங்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று சிலர் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். அவரது பெயரை கூறவே எனக்கு வெட்கமாக உள்ளது. குறுக்குவழியில் முதல்-அமைச்சர் பதவிக்கு சென்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் சாதிக்க முடியாது. தோல்வியை தான் தழுவுவார்கள். சுயநலவாதியான இயக்கம் திமுக. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி இருந்தால் தான், மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம் உயர முடியும். திட்டங்கள் அவர்களை சென்றடைய வேண்டும். இந்த ஆட்சி தொடர வேண்டுமென்றால், அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் சரத்குமார் பேசினார்.

பிரசாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்போம். பதிவாகும் வாக்கில் 75 சதவீதம் அ.தி.மு.க. பெறும் வரலாற்றை இந்த சட்டமன்ற தொகுதி உருவாக்க இருக்கிறது. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.

Next Story