தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியை, 23-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டும்


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியை, 23-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 5:28 PM GMT)

தூத்துக்குடி நாடாளு மன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியை, 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க வேண்டும் என வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பயிற்சிகளை வழங்கினார். முகாமில் அவர் பேசிய போது கூறியதாவது;-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணி முதல் தொடங்க வேண்டும். முதலாவதாக தபால் வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணும்போது ஏதேனும் கட்டுப்பாட்டு கருவியில் பழுது ஏற்பட்டால் அந்த கட்டுப்பாட்டு கருவி தனியாக வைத்திருக்க வேண்டும். மேலும் பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தால் உடனடியாக பேட்டரி மாற்ற வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், 17-ஏ படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். இதில் வித்தியாசம் இருந்தால் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை தனியாக வைத்து இறுதியில் எண்ண வேண்டும்.

வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தெரிவித்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்தான் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் ஏதேனும் 5 வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணுவது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மரகதநாதன் (தேர்தல்), சிந்து (நிலம்), தேர்தல் தனி தாசில்தார் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story