23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு


23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 6:39 PM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், துணை ராணுவம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, உள்ளூர் மற்றும் புறநகர் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியாக வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 6 இடங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து வேட்பாளர்களின் முகவர்கள் யாரும் உள்ளே வரமுடியாத வகையில் ஏற்பாடுகள் செய்வது, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது பற்றி அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு, வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்கள் எவ்வாறு பணியில் ஈடுபடுவது? ஒவ்வொரு சுற்றின் முடிவில் தேர்தல் முடிவுகளை எவ்வாறு வெளியிடுவது? மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story