காதலியை பலாத்காரம் செய்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது


காதலியை பலாத்காரம் செய்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 9:45 PM GMT (Updated: 17 May 2019 6:50 PM GMT)

பென்னாகரம் அருகே காதலியை பலாத்காரம் செய்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன். இவருடைய மகன் திருமாறன்(வயது28). எம்.ஏ. பி.எட். பட்டதாரி. இவரும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே திருமாறன், காதலித்த பெண்ணுக்கு தெரியாமல் நரசிபுரத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த திருமாறனின் காதலி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், நாங்கள் 2 பேரும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருமாறன் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து பென்னாகரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருமாறன், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பட்டதாரி வாலிபர் திருமாறனை போலீசார் கைது செய்தனர்.

Next Story