பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு


பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 7:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளி பஸ்களில் ஆதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து நடத்தப்படுகிற வருடாந்திர ஆய்வு பெரம்பலூர் தண்ணீர்பந்தலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பள்ளி பஸ்களில் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும், பள்ளி பஸ்களில் அவசரகால வழியின் செயல்பாடு மற்றும் பஸ்களில் பள்ளி மாணவ- மாணவிகள் பாடப்புத்தக பைகளை வைக்கும் வசதி, பஸ்களில் உள்ள வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி ஆகியவை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 370 பஸ்களில் முதற்கட்டமாக 245-க்கும் மேற்பட்ட பஸ்கள் அதிகாரிகளால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் தகுதி சான்று சமர்ப்பிக்கப்படாத, சிறு பழுதுகள் இருந்த 18 பஸ்கள் அடையாளம் காணப்பட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக விபத்து போன்ற அவசர காலங்களில் டிரைவர்கள் மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகளில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீயணைப்பு துறையினர் மூலமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள தனியார் பள்ளி பஸ்களும் பள்ளி திறப்பதற்கு முன் ஆய்வு செய்யப்படும் என்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் தெரிவித்தார்.

Next Story