பாதாள சாக்கடை அடைப்பால் வீட்டுக்குள் கழிவுநீர் தேக்கம்: குடிநீர் வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


பாதாள சாக்கடை அடைப்பால் வீட்டுக்குள் கழிவுநீர் தேக்கம்: குடிநீர் வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 8:15 PM GMT)

வீட்டுக்குள் கழிவுநீர் தேங்கியதால் குடிநீர் வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12-வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால் தெருக்களில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீட்டின் கழிவறைகளிலும் கழிவுநீர் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே குளம்போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பலர் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னை குடிநீர் வாரிய பகுதி செயல்பொறியாளர் விஜய்பிரகாசை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story