மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், இருதரப்பினர் இடையே மோதல் - 3 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், இருதரப்பினர் இடையே மோதல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்,

நாகூரை அடுத்த தெத்தி சமரசம் நகரை சேர்ந்தவர் அலாவுதீன். இவருடைய மகன் செல்லப்பா (வயது 21). அதே பகுதியை சேர்ந்த சித்திக் மகன் ஹமீது (20), அலி மகன் முகமது உசேன் (19) ஆகியோர் கடந்த 14-ந் தேதி இரவு நாகையில் இருந்து தெத்திக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தெத்தி கணபதி நகரை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (34), காளிதாஸ் (34), சிவசேகர் (29) ஆகியோர் தெருவிற்குள் ஏன் இவ்வளவு வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்கிறீர்கள்“ என்று தட்டிக் கேட்டனர். அதற்கு செல்லப்பா, ஹமீது, முகமது உசேன் ஆகியோர் அவர்களை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அய்யப்பன், காளிதாஸ், சிவசேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்லப்பா, முகமது உசேன், ஹமீது ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Next Story