துப்புரவு தொழிலாளி குத்திக்கொலை -மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


துப்புரவு தொழிலாளி குத்திக்கொலை -மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர், துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு உறவினர் ஒருவருடன், நாகல்நகருக்கு வந்துள்ளார். பின்னர் ஆறுமுகம் மட்டும் தனியாக வீட்டுக்கு திரும்பினார்.

நாகல்நகர் அரண்மனைகுளம் அருகே இரவு சுமார் 10 மணி அளவில் அவர் நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து, அவருக்கு அருகே நின்றது. அதில் இருந்து 2 பேர் கத்தியுடன் இறங்கினர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆறுமுகத்தை 2 பேரும் சூழ்ந்து சரமாரியாக குத்தினர்.

இதனால் நிலைகுலைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். மேலும் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் ஆறுமுகத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஆறுமுகம் தனியாக வருவதை அறிந்த அந்த நபர்கள் பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story