திங்கள்சந்தை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ததாக திடுக்கிடும் தகவல்


திங்கள்சந்தை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ததாக திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 2:32 PM GMT)

திங்கள்சந்தை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் சப்ளை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை கூண்டோடு பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இரணியல் போலீசார் திங்கள் சந்தை பகுதியில் நேற்றுமுன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். இதில் 100 கிராம் கஞ்சா இருவரிடமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா விற்ற இருவரும் நெய்யூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 28), ராஜேஷ் (26) என்பதும், இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தொடர்ந்து இருவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story