திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:15 PM GMT)

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை, தங்க கருடசேவை ஆகியவை நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் சிவன் திருக்கோலம் வெள்ளை சாத்தி புறப்பாடும், வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்வசமும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள் உபயநாச்சியார் நால்வருடன் தேருக்கு எழுந்தருளினர், இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், திருமருகல், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு் சவுரிராஜா, கோவிந்தா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சப்தாவர்ணம் திருமஞ்சனமும், நாளை(திங்கட்கிழமை) காலை பெரிய பெருமாள் திருமஞ்சனமும், மாலை மடவிளாகம் புறப்பாடும், 21-ந்தேதி மாலை வெள்ளிரதம் புறப்பாடும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Next Story