தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை


தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 6:48 PM GMT)

தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காமராஜர் சாலையை சேர்ந்தவர் ரவி (வயது 45). ஆட்டோ டிரைவர். நேற்று காலை ரவி, அவரது வீட்டின் அருகில் உள்ள தனியார் கிளனிக் வரண்டாவில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆட்டோ டிரைவர் ரவிக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி, கணவரை விட்டு பரிந்து குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ரவிக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது. தினமும் அவர் குடித்துவிட்டு போதையில் வீட்டின் அருகில் உள்ள இந்த தனியார் கிளனிக் வரண்டாவில்தான் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தனியார் கிளனிக் வரண்டாவில் படுத்து தூங்கிய அவர், நேற்று காலையில் தூக்கில் பிணமாக தொங்கியது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆட்டோ டிரைவர் ரவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நள்ளிரவில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவியை யாராவது கொலை செய்துவிட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story