வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வேட்பாளர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் வேண்டுகோள்


வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வேட்பாளர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 7:00 PM GMT)

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 2-வது கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வைத்து எண்ணப்பட இருக்கிறது. தற்போது அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாக்கு எண்ணிக்கை குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டு, தபால் ஓட்டுகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்படும். வேட்பாளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு எடுத்து செல்லுவதை கண்காணித்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து அரசு கலைக்கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து 30 நிமிடத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அவர்களின் சார்பாக ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் 14 முகவர்களையும், தபால் ஓட்டு எண்ணும் இடத்தில் ஒரு முகவரையும் நியமனம் செய்து கொள்ளலாம்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்கள், முகவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் அதற்குரிய சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிட மிருந்து பெறும்பொழுது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், சப்- கலெக்டர்கள் திருக்கோவிலூர் சாருஸ்ரீ, திண்டிவனம் மெர்சிரம்யா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் விழுப்புரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story