விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் சாவு


விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் சாவு
x
தினத்தந்தி 19 May 2019 10:00 PM GMT (Updated: 19 May 2019 7:40 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே பெண் பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம், 

வேப்பூர் அருகே தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி செல்வராணி (50). செல்வராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் சென்றபோது, பின்னால் சரக்கு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். அப்போது செல்வராணியின் தலை லாரி சக்கரத்தில் சிக்கியது. இதில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் செல்வராணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தன் கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மயங்கினார். உடனே அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story